மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் கப்ராலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

26

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உட்பட ஐந்து நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.

அதன்படி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முடித்துக்கொண்ட இலஞ்ச ஆணைக்குழு கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு இலக்கம் 271/2024 இன் கீழ் சட்ட நடவடிக்கையை ஆரம்பித்தது.

2012 ஆம் ஆண்டு தென்கிழக்கு ஐரோப்பிய நாடு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்த போது, கிரீஸ் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட திறைசேரி பத்திரங்களை மத்திய வங்கி கொள்வனவு செய்தமைக்கு எதிராக இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.

கிரீஸ் எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடியை அறிந்திருந்தும் இந்த கொள்வனவு மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் மூலம் 1000 கோடி ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சேனசிங்க தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், அஜித் நிவாட் கப்ரால், கங்கணம்கே கமகே டொன் தர்மசேன தீரசிங்க, பெந்தரகே டொன் வசந்த ஆனந்த சில்வா, சந்திரசிறி ஜயசிங்க பண்டித சிறிவர்தன மற்றும் ஹரங்கஹா ஆராச்சிலகே கருணாரத்ன ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

Join Our WhatsApp Group