முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் பலரை உள்ளடக்கிய அம்மான் படை என்ற புதிய அமைப்பை ஸ்தாபிப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் அறிவித்துள்ளார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் (TUFF) தலைவராக கடமையாற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன், சவால்களுக்கு மத்தியில் தேசிய முன்னேற்றத்தின் தற்போதைய வரலாற்றை மேற்கோள் காட்டி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் இருந்த முந்தைய நிர்வாகத்தை விமர்சித்துள்ள அவர், அந்த காலகட்டத்தில் தேசத்தின் வீழ்ச்சிக்கு அவரே காரணம் என்றும் தெரிவித்தார்.
இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாட்டை முன்னேற்றத்தை நோக்கி இட்டுச் செல்வதில் விக்கிரமசிங்கவின் முயற்சிகளை அங்கீகரித்த விநாயகமூர்த்தி முரளிதரன், தற்போதைய தலைமையின் கீழ் தான் நாடு முன்னேற்றத்தைக் கண்டது என்றும் குறிப்பிட்டார்.
விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தெரிவானால் அவருக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக முரளிதரன் உறுதிப்படுத்தினார்.