பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உலா வந்த அமிதாப் பச்சனுக்கு தற்போது 81 வயதாகிறது. இவருக்கு திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து, அவருக்கு இதயத்தில் ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனை தரப்போ அல்லது குடும்பத்தினரோ இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளனர்.
இதனிடையே, மருத்துவமனையில் அமிதாப் பச்சன் சிகிச்சையில் இருக்கும் நிலையில், அவரது எக்ஸ் பக்கத்தில் எப்போதும் நன்றியுடன் என்று பதிவு வெளியானது. மேலும், தனது இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் அணியை விளம்பரப்படுத்தும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், இந்த ஆண்டில் அமிதாப் பச்சனுக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது அறுவை சிகிச்சை இதுவாகும். பிரபாஸ், கமல்ஹாசன் நடிக்கும் கல்கி படத்தின் படப்பிடிப்பின் போது அமிதாப் பச்சனுக்கு ஜனவரியில் மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது, ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அவரது ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர்.