பாராளுமன்ற தேர்தலில் எனது கட்சி போட்டியிடாது – கமல்ஹாசன்

18

மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை.

தி.மு.க. கூட்டணிக்காக அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறோம் என்றார் கமல்ஹாசன்.

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று மதியம் 1 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்று அழைத்துச் சென்றார். பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. அந்த உடன்பாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், கமல்ஹாசனும் கையெழுத்திட்டனர்.

மேலும் இந்த உடன்பாட்டில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் பிரசார பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து விட்டு வெளியே வந்த கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:

பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எங்கள் கட்சி சார்பிலும் வேறு யாரும் போட்டியிடவில்லை. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு எங்களது முழு ஒத்துழைப்பு இருக்கும். இது பதவிக்கான விஷயம் இல்லை. நாட்டுக்கான விஷயம் என்பதால் எங்கு கை குலுக்க வேண்டுமோ அங்கு கை குலுக்கி இருக்கிறேன் என தெரிவித்தார்.

Join Our WhatsApp Group