- அமைச்சர் ஜீவன் தொண்டமான் தீபாவளி வாழ்த்துச் செய்தி
தீப ஒளியில் இருள் விலகுவதுபோல் உங்கள் வாழ்விலும் துன்பம் விலகி இன்பம் நிலைத்து இருக்கட்டும். அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் பிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.” என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அவர் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீண்டு வரும் சூழ்நிலையிலேயே இம்முறை தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றோம். எனவே, எமது நாட்டை சூழ்ந்துள்ள இருள் அகன்று, நாட்டுக்கும், மக்களுக்கும் ஒளிமயமான எதிர்காலம் பிறக்க நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய தருணம் இது. ஒற்றுமை, ஐக்கியம் என்பவற்றின் முக்கியத்துவத்தையும் தீபாவளி பண்டிகை உணர்த்துகின்றது. ஆகவே, எமது மலையக மண்ணின் மறுமலர்ச்சிக்காகவும் ஒன்றுபடுவோம் என்ற அழைப்பையும் இந்த உன்னதமான நாளில் விடுக்கின்றேன்.
அதேபோல எதை செய்தாலும் பாதுகாப்பு என்பது மிக முக்கியம். ஆகவே, மிகவும் பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம். இல்லாதவர்களுக்கு எம்மிடம் உள்ளதை கொடுத்து அவர்களையும் மகிழ்விப்போம். நாடெங்கும் அன்பும், அமைதியும் தழைக்கட்டும். வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும், மகிழ்ச்சியான இந்த நாளில் அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
