புத்தளம் மாவட்டத்தில் தெதுரு ஓயா மற்றும் தப்போவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த சில தினங்கள் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக, தெதுரு ஓயாவின் நீர்மட்டம் உயர்வடைந்தமையால், தெதுரு ஓயாவின் 8 வான் கதவுகள திறக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில், 4 வான் கதவுகள் 4 அடி உயரத்திலும், 4 வான் கதவுகள் 2 அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் குறித்த நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 15,200 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது.
இதேவேளை, தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், அதில் 2 வான் கதவுகள் 6 அடி உயரத்திலும், 2 வான் கதவுகள் தலா 1 அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தெதுரு ஓயா மற்றும் தப்போவ ஆகிய நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால் குறித்த 2 நீர்த்தேக்கங்களை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி கூறினார்.
இந்த அடிப்படையில், வாரியாபொல, நிகவெரட்டிய, மஹவ, ஆராச்சிக்கட்டுவ, சிலாபம், பல்லம, பிங்கிரிய, ரஸ்னாயக்கபுர ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும், அந்த பகுதி ஊடாக போக்குவரத்து மேற்கொள்ளும் வாகன சாரதிகளும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்