சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 05 வருட சிறைத்தண்டனை விதித்து இரத்தினபுரி மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கி உள்ளது. முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பிரதிவாதிக்கு 20,000 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05 ஆம் திகதி கஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் சிலர் காயமடைந்திருந்தனர். துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணை நடத்திய கஹவத்தை பொலிஸாரால் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக அடையாளங்காணப்பட்ட அப்போதைய பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை கைது செய்வதற்கு ஆயத்தமான வேளை, அவரை கைது செய்ய வேண்டாம் என கஹவத்தை பொலிஸ் நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரி லலித் ராஜமந்திரிக்கு அழுத்தம் கொடுத்தமை தொடர்பில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்து.