மக்களை விண்வெளியின் எல்லைக்குப் பலூனில் அழைத்துச் செல்ல முயல்கிறது ஜப்பானில் ஒரு நிறுவனம்.இந்த ஆண்டு ஜுலை மாதம் மனிதரை வைத்து நடத்தப்பட்ட சோதனையில் அந்த ஹீலியம் பலூன் 6 கிலோமீட்டர் உயரம் சென்றது.
இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் இலக்கான 25 கிலோமீட்டரைப் பலூன் எட்டிவிடும் என்று நம்பப்படுகிறது.திட்டத்தை வழங்கும் Iwaya நிறுவனம் மக்கள் பூமியின் நீல நிறத்தையும் விண்வெளியின் இருட்டையும் விரைவில் காண முடியும் என்று கூறியது.அந்த 4 மணி நேரப் பயணத்திற்கான விலையோ ஒருவருக்குச் சுமார் 222,000 வெள்ளி.
4 கிலோமீட்டர் உயரத்தில் மூச்சுவிடுவது சிரமமாகிவிடும் என்பதால், பலூனில் மக்கள் இருக்கும் பகுதி சிறப்புப் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருப்பதாக SCMP செய்தி நிறுவனம் சொன்னது.பெரிய பலூனுடன் இன்னும் அதிக தூரம் பயணம் செய்ய முடியும் என்று Iwaya குறிப்பிட்டது.அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பயணங்களைத் தொடங்க அது திட்டமிட்டுள்ளது.ஏற்கனவே எதிர்பார்த்ததைவிட அதிகமான விண்ணப்பங்களைப் பெற்றிருப்பதாக SCMP தெரிவித்தது.