(கனகராசா சரவணன்)
இலங்கையிலுள்ள காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு இதுவரை 14,988 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.இதில் 4018 முறைப்பாடுகளை பூர்வாங்க விசாரணை செய்துள்ளதுடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் 15 பேரை நேரடியாக சந்தித்து கண்டு பிடித்துள்ளதுள்ளோம். எனவே இந்த கண்ணீருடன் வாழுகின்ற மக்களுடைய கண்ணீருக்கும் அவர்களுடைய துன்ப துயரங்கள் கவலைகள் வலிகளுக்கும் நிச்சயமாக எமது அலுவலகம் சார்பிலே எம்மால் முடிந்தவரையில் தீர்க்கமான தீர்மானங்களை எடுப்போம் என காணாமல் போனோர் தொடர்பான
அலுவலக ஆணையாளர்களில் ஒருவரான யோகராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உல்லாச விடுதி ஒன்றில் காணாமல் போன ஆட்கள் அலுவலக தலைவர் சட்டத்தரணி மகேஸ் கத்துரங்க ,ஆணையாளர்களில் ஒருவரான யோகராஜா ஆகியோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (3) நடாத்திய ஊடக மாநாட்டில் ஆணையாளர் யோகராஜா இவ்வாறு தெரிவித்தார். .
2018ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அலுவலகத்திற்கு இதுவரையில் 14 ஆயிரத்து 988 முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை காலத்தின் அடிப்படையில் 3 பிரிவுகளாக பிரித்தோம். அதில் 2000 ஆண்டில் இருந்து 2020 வரையிலும் முதலாம் தரத்திலும் 1990 ம் ஆண்டில் இருந்து 2000 ஆயிரம் ஆண்டு வரையும் இரண்டாம் தரத்திலும் 1990 ம் ஆண்டுக்கு பிற்பட்டதை 3 ம் பிரிவாகவும் பிரித்துள்ளோம்.
இதனடிப்படையில், முதலாவது தரத்திலுள்ள விசாரணைகள் ஆரம்பித்துள்ளோம். இதில் 6 ஆயிரத்து 25 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.இந்த முறைப்பாட்டில் இன்று வரைக்கும் 4 ஆயிரத்து 18 முறைப்பாடுகளை பூர்வாங்க விசாரணை செய்துள்ளோம்.
இருந்தபோதும் எமது விசாரணையின் போது முல்லைத்தீவு. மட்டக்களப்பு நகர் போன்ற பல இடங்களில் பல்வேறுபட்ட எதிர்ப்புக்களை சந்தித்துள்ளோம். எனவே எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் செய்வது அவர்களது உரிமை. அதனை அவர்கள் செய்வதற்கு நாங்கள் என்றுமே தடையில்லை.ஆனால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட அந்த கடமைகளை சரிவர செய்துகொண்டிருக்கின்றோம்.
முதலாவது பிரிவில் 6025 முறைப்பாட்டில் இன்றுவரை 4018 முறைப்பாடுகளை விசாரணை செய்து முடித்துள்ளோம். அதில் 80 வீதமான முறைப்பாட்டாளர்கள் வருகைதந்து எங்கள் விசாரணைக்கு உறுதுணையாக இருந்து அறிக்கைகளை பெற்றனர்.
இருந்தபோதும், தற்போது எமது அலுவலகத்தில் பூர்வாங்க விசாரணை முடிந்த 3 வகையான தொடர்நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். அதில் முதலாவதாக இடைக்கால கொடுப்பனவாக இரண்டு இலட்சம் ரூபா இதுவரைக்கும் 300 பேருக்கு மேற்பட்வர்களுக்கு ஒரு கொடுப்பனவு வழங்கிருக்கின்றோம். அத்துடன் மரணச் சான்றிதழ் மற்றும் காணப்படாத சான்றிதழ் போன்றவற்றிக்கு சிபார்சுகளை செய்து இதுவரைக்கும் இவற்றை பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.
இந்த நிலையில் காணாமல் போனவர்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின்படி, வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் 15 பேரை நேரடியாக சந்தித்து கண்டு பிடித்து அவர்களுடைய விபரங்களை பெற்று அந்த விபரங்களின் படி அறிக்கையிட்டு 15 பேரின் முறைப்பாட்டு கோவைகளை முடிவுறுத்தியுள்ளோம்.
இடைக்கால நிவாரணம் என்பது காணாமல் போனவர்களுக்கான நஷ்டஈடு அல்ல. இது காணாமல் போனவர்களில் தங்கியிருக்கும் குடும்ப உறவினருக்கு ஒரு இடைக்கால நிவாரணம். இது அரசால் அறிவிக்கப்பட்ட 2 இலட்சம் ரூபா கொடுப்பனவுக்கு நாங்கள் சிபார்சு செய்து கொண்டிருக்கின்றோம். அதேவேளை, மரண சான்றிதழ்கள் மிகவும் குறைவானவர்கள்தான் கேட்கின்றனர்.
அதேவேளை முறைபாட்டிற்கு விண்ணப்பித்து விசாரணைக்கு வரும் 90 சதவீதத்தினர் காணப்படாததற்கான சான்றிதழ்களை கேட்டு வாங்கி கொண்டிருக்கின்றனர்.
இந்த இடைக்கால நிவாரணமாக 2 இலட் சம் ரூபா பெற்றுக் கொடுப்பதற்கு மேலதிகமாக குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை 3 நிறுவனங்கள் அதாவது காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இரண்டாவது ஓ.ஆர் எனப்படும் இழப்பீடுகளுக்கான அலுவலகம். மூன்றாவது சமாதாதனத்துக்கான அலுவலகம் ஆகிய 3ம் இணைந்து செயற்படுகின்றது.
இந்தவகையில் இடைக்கால கொடுப்பனவு பற்றி ஓ.ஆர் எனப்படும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் செயற்படுவதுடன் எங்கள் அலுவலகத்தின் சிபார்சில் இடம்பெறுவதுடன் சமாதாதனத்துக்கான அலுவலகம் ஊடாக சிறுசிறு உதவிகள் வழங்குவற்கான ஏற்பாடுகள் இருக்கின்றதுடன் அதற்கு மேலதிகமாக காணாமல்போன ஒருவருக்கு 10 இலட்சம் ரூபாவை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த அலுவலகத்தில் ஒரு தலைவர் 6 ஆணையாளர்களும் சபை உறுப்பினர்கள் இருக்கின்றனர். பூர்வாங்க விசாரணை செய்யும் போது அனைத்து ஆணையாளர்களுக்கும் அனைத்து சபை உறுப்பினர்களுக்கும் உள்ள உணர்வுகள் நாங்கள் தற்போது கருதுவது யுத்தம் புரிந்த புலிகளையே வேறு இயக்கங்களாக இருந்தாலும் சரி அல்லது முப்படைகளின் பொறுப்பாளர்களாக இருந்தாலும் சரி அந்த இரு பகுதியினரதும் பெற்றோர் அல்லது கணவன் மனைவியே குழந்தைகளே சகோதரர்களே இருக்கின்ற உறவுகள் ஒரே மாதிரியானவை என்பதை நாங்கள் தீர்க்கமாக தீர்மானித்துக் கொண்டுதான் இந்த பூர்வாங்க விசாரணைகளை நடாத்தி வருகின்றோம் என்றார்.