புதிய அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதற்கான முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொன்க் தெரிவித்தார்.
அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து சமகால அரசியல், பொருளாதார விவகாரங்கள் குறித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 12 மாதங்களில் இலங்கையின் பொருளாதார மீட்சி செயன்முறை குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி கொண்டுள்ளதாகவும் சீனத் தூதுவர் பிரதமருக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கு சீனா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு புத்தகப் பைகள், காகிதாதிகள், பாடசாலை சீருடைகளுக்கான துணிகள் மற்றும் கல்வி உபகரணங்களை அண்மையில் சீனா வழங்கியமைக்கும் பிரதமர் தமது நன்றியை தெரிவித்தார்.
பொருளாதார பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வுகளை வழங்குவதற்காக நேரடி தனியார் முதலீடுகள் மற்றும் விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் துறைகளில் முதலீடுகளை இலங்கை வரவேற்கும் என்றும் பிரதமர் கூறினார்.
இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவும் கலந்துகொண்டார்.