குருந்தூர் மலையில் பொங்கலிட சென்றோர் மீது பலாத்காரம் : பௌத்த தேரரும் அட்டகாசம்(Photos)

21

கஜேந்திரன் எம் பி உட்பட அங்கு சென்றவர்கள் வெளியேற்றம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பிரதோச தினத்தில் பொங்கல் நிகழ்வை முன்னெடுக்கவுள்ளதாக ஆதிசிவன் ஜயனார் ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்திருந்தார்கள்.

இந்நிலையில் குருந்தூர்மலை பகுதியில் நீதிமன்ற கட்டளைக்கு மீறி அமைக்கப்பட்ட விகாரையின் விகாராதிபதி கல்கமுவ சந்தபோதி அவர்கள் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக தமிழ் தீவிரவாதிகளால் குறித்த இடத்தில் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்போவதாகவும் பொங்கல் செய்ய போவதாகவும் சிங்கள மக்கள் திரண்டு வந்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இங்கு இனமுறுகல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறித்த பொங்கல் நிகழ்வை தடுத்து நிறுத்துமாறும் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்திலும் கடந்த 11.07.2023 அன்று முறைப்பாடு பதிவு செய்திருந்தார் இவற்றுக்கமைய முல்லைத்தீவு பொலீசார் நீதிமன்றில் நேற்றையதினம்(13) குறித்த தேரரின் கருத்திற்கமைய முல்லைத்தீவு நீதிமன்றில் தடை உத்தரவினை கோரியிருந்தனர் நீதிமன்றானது அவ்வாறு வழிபாட்டிற்கு தடை விதிக்க முடியாது என்றும் விக்கிரகங்களை அங்கு பிரதிஸ்டை செய்யாமல் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியிருந்தது.

குறித்த தேரர் அவர்கள் பொலிஸ் ஊடாகவும் நீதிமன்றம் ஊடாகவும் குறித்த நிகழ்வினை தடைசெய்யமுடியாததினால் தென்பகுதியில் இருந்து சிங்கள மக்களையும் தேரர்களையும் இரண்டு பேருந்துக்களில் அழைத்து வந்து இன்றையதினம் காலை 8 மணியளவிலே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டார்.

இதன் போது தமிழ் மக்கள் அந்த வழிபாடுகளுக்கு எந்தவிதமான இடையூறுகளும் வழங்காத நிலையில் பொலிசாரும் குறித்த வழிபாடுகளுக்கு முழுமையான ஆதரவினை வழங்கி இருந்தார்கள்.

இதன் பின்னர் காலை 9.00 மணிளயவில் தமிழ் தரப்புக்கள் அங்கு பொங்கல் பொங்குவதற்காக வருகை தந்து ஆயத்த வேலைகளில் ஈடுபட்ட போது பொங்கல் பொங்குவதற்க்காக கற்பூரம் வைத்து தீ மூட்டிய போது அங்கு சிவில் உடையில் வந்த நபரொருவர் காலால் தீயினை உதைத்தார்.குறித்த இடத்திற்கு வந்த பௌத்த துறவிகள் மற்றும் சிங்கள மக்கள் குறித்த இடத்தில் இடம்பெறுகின்ற பொங்கல் நிகழ்வில் தீ மூட்ட முடியாது என்றும் உடனடியாக அதனை நிறுத்து மாறும் பொலிசாருடன் தர்க்கப்பட்டு பொங்குவதற்கான மறுப்பினை தெரிவித்தனர்.

இதன்போது அங்கு பிரசன்னமான தொல்லியல் திணைக்கள அதிகாரி குறித்த பகுதி 1932 ஆம் ஆண்டு தொடக்கம் தொல்லியல் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் தொல்லியல் பிரதேசத்தில் நிலத்தில் தீ மூட்ட முடியாது எனவும் அது குற்றம் எனவும் தெரிவித்துள்ளார்.இதனை வைத்து உடனடியாக பொங்கல் நிகழ்வை நிறுத்துமாறு அங்கு நின்ற தேரர்களும் சிங்கள மக்களும் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதிக்கு அமைவாக மீளவும் பொங்கல் பொங்க தீ மூட்டிய போது கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சமூத்திர ஜீவ அவர்களும் அவரது உதவியாளரும் வருகைதந்து சப்பாத்து கால்களால் உதைத்து குழப்பியுள்ளார்கள்.இதன்போது மக்கள் குழம்பியபோது கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சமூத்திர ஜீவ அவர்கள் காலால் தட்டியதற்கு மக்களிடம் மன்னிப்பு கோரினார்

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அதில் அமர்ந்து கொண்டு தாங்கள் பொங்கல் பொங்கியே போவோம் என்று அமர்ந்து கொண்டார்கள்.அதன் பின்னர் தமிழ் மக்கள் சிவபுராணம் பாடி அமைதியாக வழிபாட்டில் ஈடுபட்ட போது அங்கு நின்ற சிங்கள மக்கள் குழப்பம் விளைவிக்கும் முகமாக கோசமிட்டதோடு தேரர்கள் சிலர் பிரித் ஓதி குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.இந்த நிலையில் அங்கு ஒரு முறுகல் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் பொலிசார் சிங்கள மக்களையும் தேரர்களையும் இவர்களை நாங்கள் விரட்டுகிறோம் நீங்கள் செல்லுங்கள் என அவர்களுக்கு சொல்லி அங்கிருந்து வெளியேற சொல்லி விட்டு தேவாரம் பாடிக்கொண்டிருந்த தமிழ்மக்களை வலுக்கட்டாயமாக எழுப்பி கலைக்க முற்பட்டார்கள் இதில் இருந்த பெண்கள் மற்றும் ஆண்களை இழுத்து எழுப்பியபோது அங்கு முறுகல் நிலை ஒன்று காணப்பட்டது சிவில் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் என்பவர் மீது பொலிஸ் கொட்டானால் தாக்குதல் நடத்தி அதில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள் இதன்போது பெண்களையும் பெண் பொலிசார் இல்லாமல் ஆண் பொலிசார் மிக கேவலமான முறையில் அணுகி அவர்களை தள்ளி தாக்குதல் நடத்தினர்.

இதன் பின்னரும் மக்கள் கலைந்து செல்லாது தர்க்கப்பட்டு நின்ற நிலையில் தவத்திரு வேலன் சுவாமி அவர்களின் வேண்டுகோழுக்கிணங்க 30 நிமிடங்கள் அமைதியாக தேவாரம் பாடிவிட்டு செல்வதற்கு பொலிசாரிடம் அனுமதிகேட்டு அதற்கு இணங்க தேவாரம் பாடிவிட்டு ஆலயம் அமைந்திருந்த பகுதிக்கு முன்பாக கல் ஒன்றை வைத்து அதில் தேங்காய் அடித்து விட்டு பொங்கலுக்காக கொண்டுவந்த பாலினை ஊற்றி ,பூக்களை போட்டு வழிபட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்கள்.
( நன்றி -உதயம் நியூஸ்)

Join Our WhatsApp Group