ஹதரலியத்த தம்பிட விகாரையின் பிரதமகுரு மாறுவேடத்தில் சடலமாக மீட்பு

33

ஹதரலியத்த தம்பிட விகாரையின் பிரதமகுரு முருத்தெனிய சீலரதன தேரர், வீதியில் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் ஹதரலியத்த பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

67 வயதான குறித்த பிக்குவின் சடலம் நேற்று (12) காலை விகாரையில் இருந்து சுமார் 600 மீற்றர் தொலைவில் சாரம் மற்றும் டீ ஷர்ட்டுடன் வீதியில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், சடலத்தின் அருகே காய்கறிகள் உள்ள பை கண்டெடுக்கப்பட்டது.

வீதியில் ஒருவர் விழுந்து கிடந்ததை அவதானித்த மக்கள், அவர் யார் என ஆராய்ந்தபோது, விகாரையின் தலைமை விகாராதிபதி என்பது தெரிய வந்தது.

இவர் நேற்று முன்தினம் இரவு விகாரையில் தங்கியிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. அவர் நள்ளிரவில் விகாரையை விட்டு வெளியேறியிருக்கலாம் என்றும், திரும்பி வரும் வழியில் அவர் இறிந்திருந்த கூடுமென மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விகாரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இடத்திற்கு மாறுவேடத்தில் பிக்கு பயணித்துள்ளதாக பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பிக்கு சடலமாக கிடந்த இடத்தில் அவரது கைத்தொலைபேசியும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்ததன் மூலம் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த நபர் நேற்று காலை, பிக்கு சடலமாக கிடந்த இடத்திற்கு வந்து கண்ணீர் விட்டு அழுததாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, அந்த நபர் யார் என்பது கிராம மக்களுக்கு பகிரங்கமாக தெரிந்த இரகசியம் என்றும், அந்த நபர் இரவில் விகாரைக்கு சென்று பிக்குவை சந்திப்பது வழக்கமென ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பயணத்தை இரகசியமாக வைத்திருக்க பிக்கு மாறுவேடத்தில் விகாரையை விட்டு வெளியேறியிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவரது உடலில் தாக்கப்பட்டதற்கான அடையாளங்களோ அல்லது வாகனம் விபத்துக்குள்ளானதற்கான அடையாளங்களோ இல்லை என பொலிஸார் தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும், பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரியவரும் என்றும் தெரிவித்தனர்.

Join Our WhatsApp Group