“எங்களது காணியில் இருந்து வெளியேறுங்கள், அதன் பின்னர் நீங்கள் தரும் பிஸ்கட் மற்றும் குளிர்பானங்களை சாப்பிடுகின்றோம்” என யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கடற்படையிரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடற்படையினர் வழங்கிய பிஸ்கட் மற்றும் குளிர்பானங்களையும் பொது மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணித்திருந்தனர்.
யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக, பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக காணிகளை சுவீகரிக்கும் நோக்கில், இன்று அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினர் உத்தியோகபூர்வமாக முன்னர் அறிவித்திருந்தனர்.
வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளையே இவ்வாறு சுவீகரிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

இதன்படி, மண்டைதீவு கிழக்கு முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் இன்று காலை 7.30 மணியளவில் ஒன்று கூடிய போராட்டகாரர்கள் வெலிசுமன கடற்படை முகாம் முன்பாக கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்த போராட்டத்தை தொடர்ந்து குறித்த கடற்படை முகாமுக்கு முன்பாக பொலிஸார், புலனாய்வாளர்கள் மற்றும் கடற்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில், புலனாய்வாளர்கள் புகைப்படமெடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடற்படை காணிகளை விட்டு வெளியேற வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எவ்வாறாயினும், காணி அளவீட்டாளர்கள் இன்றைய தினம் குறித்த பகுதிக்கு வந்திருக்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த போராட்டத்தின் முடிவில் கடற்படையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பிஸ்கட் மற்றும் குளிர்பானம் வழங்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.
கடற்படையினரின் இந்த நடவடிக்கைக்கு போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். “எங்கட காணியை விட்டு எழும்பி போங்கோ பின்னர் நீங்கள் தரும் பிஸ்கட்டை சாப்பிடுவோம்” என காணி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
(நன்றி- ஒருவன்)


