சில தமிழ் கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றை தயாரித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த கடிதத்தில் ஐனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பங்காளிகளான ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ,புளொட், தமிழ் தேசிய கட்சி, ஐனநாயக போராளிகள் கட்சி ஆகியனவும் விக்னேஸ்வரன் எம்.பி. தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும் கையொப்பம் வைப்பார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
சமகால நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் கடிதத்தில் (12) கையொப்பம் சேகரிக்கப்பட்டு இன்று அல்லது நாளை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரிடம் அது கையளிக்கப்படும் என்றார்.
மேலும் குறித்த கடிதத்தில் இந்திய இலங்கை ஒப்பந்தம் பிரகாரம் கொண்டு வரப்பட்ட 13ம் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்திய அரசாங்கம் தமிழர் தரப்பு விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சில தமிழ் கட்சிகள் இணைந்து குறித்த கடிதத்தை தயாரித்துள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி தனியாக இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்கனவே கடிதத்தை இந்திய துணைத்தூதர் ஊடாக இந்தியப் பிரதமருக்கு அனுப்பியுள்ளது.