பௌத்த மதகுருமாருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சதி ;புலம்பெயர் சமூகத்திலிருந்து நிதி

22

பௌத்த மதகுருமாரிடமிருந்து 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது என குறிப்பிட்டுள்ள பகியங்கல ஆனந்த சாகர தேரர், பௌத்த மதகுருமாரின் கண்ணியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த திட்டமிட்ட முயற்சிகள் இடம்பெறுகின்றன புலம்பெயர் சமூகம் இதற்கு நிதி வழங்குகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச உள்நாட்டு சூழ்நிலைகள் வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கின்ற நிலையில் பௌத்தமதகுருமாரும் பலவீனமான நிலையில் உள்ளனர். அவர்கள் குற்றச்செயல்களிற்கு பலியாகலாம்.

தற்போதைய பொருளாதார சமூக சூழ்நிலைகளில் பௌத்தமதகுருமார் ஒருவரிடமிருந்து 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது சரியான மனோநிலையில்லை.

ஆகவே இந்த நாட்டின் பௌத்தமதகுருமாரும் மக்களும் சரியான பாதையை பின்பற்றவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம்.பௌத்தமதகுருமார் என்ற அடிப்படையில் நாங்கள் வீடியோக்களில் காணப்படும் சம்பவங்களை ஏற்றுக்கொள்வதில்லை.

அதேவேளை, தற்போதைய சமூக நிலைமையின் கீழ் பௌத்தமதகுருமாரிடமிருந்து 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது.சமீபத்தைய சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. அவை நன்கு திட்டமிடப்பட்டவை.

சிவில் சமூகத்தின் மத்தியில் பௌத்தமதகுருமாரின் கௌரவத்தை அதிகாரத்தை குறைப்பதற்காக இவை முன்னெடுக்கப்படுகின்றன.அரச சார்பற்ற அமைப்புகள் இதனை முன்னெடுக்கின்ற பெருமளவு பணம் புலம்பெயர்ந்தோர் மத்தியிலிருந்து இதற்கு கிடைக்கின்றது.

கடந்த சில தினங்களாக நாங்கள் தகவல்தொழில்நுட்ப துறையினர் மற்றும் கற்றவர்களுடன் இது குறித்து ஆராய்ந்தோம், இதன் மூலம் இந்த நடவடிக்கைகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன என்பது தெரியவந்துள்ளது.

அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறித்து நாங்கள் வெட்கமடைந்துள்ளோம், என அவர் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group