உலக கோப்பை தொடரில் பல்வேறு நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. போட்டி அட்டவணையும் வெளியானது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவில் 5 போட்டிகளில் விளையாடுகிறது பாகிஸ்தான்.
லாகூர்:
50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபரில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் 5 போட்டிகளில் விளையாடுகிறது.
இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்குமா என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
இதற்காக பாகிஸ்தான் அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக் குழுவில் பாகிஸ்தான் விளையாட்டுத்துறை மந்திரி, வெளியுறவுத் துறை மந்திரி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்குமா, பங்கேற்காதா என்பது தெரியவரும்.
இந்நிலையில், பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்காவிட்டால், இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது என அந்நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி இஷான் மசாரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த விவகாரத்தில் என் கருத்து என்னவென்றால் ஆசிய கோப்பையை பொதுவான மைதானத்தில் (பாகிஸ்தான் அல்லாமல் இலங்கையில்) விளையாட வேண்டுமென இந்தியா கோரிக்கை வைக்கும்போது, உலக கோப்பையையும் பொதுவான மைதானத்தில் (இந்தியாவில் அல்லாமல் இலங்கை போன்ற பிற நாடுகளில்) விளையாட வேண்டுமென நாங்கள் கோரிக்கை விடுப்போம். இந்த விவகாரத்தில் 11 மந்திரிகள் கொண்ட குழு ஆலோசனை நடத்தி முடிவை பிரதமர் ஷெரிப்பிடம் தெரிவிப்போம் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு செல்லுமா என்பது குறித்து பிரதமர் தான் இறுதி முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.