ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கர்களில் சோதனை நடத்த போலீஸ் முடிவு

40

சென்னை:

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் லாக்கரில் இருந்த நகைகள் திருடப்பட்டது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஐஸ்வர்யாவின் வீட்டில் வேலைக்காரப் பெண் ஈஸ்வரி, டிரைவர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து லாக்கரில் இருந்த நகைகளை சிறிது சிறிதாக திருடி தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடம் இருந்தும் 100 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.

இதுதவிர வெள்ளி மற்றும் வைர நகைகளும் மீட்கப்பட்டன. வேலைக்காரப் பெண்ணான ஈஸ்வரி திருடிய நகைகளை விற்று அதில் சோழிங்கநல்லூர் பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பில் நிலம் வாங்கி போட்டிருப்பதும், குடும்பத்துக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்திருப்பதும் தெரியவந்தது.

கணவருக்கு காய்கறி கடை, மகளுக்கு மளிகை கடை ஆகியவற்றை வைத்துக் கொடுத்திருப்பதுடன் இன்னொரு மகளுக்கு திருமணம் செய்து வைத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தேனாம்பேட்டை போலீசில் ஐஸ்வர்யா அளித்த புகாரில் குறிப்பிட்டிருப்பதை விட அதிக அளவில் கூடுதல் நகைகள் வேலைக்காரப் பெண்ணான ஈஸ்வரி வீட்டில் இருந்து மீட்கப்பட்டிருப்பதுதான் இந்த வழக்கில் போலீசாரை அடுத்த கட்ட விசாரணைக்கு தள்ளி இருக்கிறது.

இதையடுத்து திருடப்பட்ட நகைகள் தொடர்பாக கூடுதல் விவரங்களை திரட்ட போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஐஸ்வர்யாவின் லாக்கரில் சோதனை நடத்தி அவரிடமும் விசாரிக்க போலீஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group