ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று 74ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இவருடைய பிறந்த நாளையொட்டி, நாட்டில் எந்த விதமான விசேட ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இலங்கையில் வெளியாகிய எந்த ஒரு ஊடகமும் இவருடைய பிறந்த நாளை ஒட்டிய எந்த தகவலுக்கும் முக்கியத்துவம் வழங்கவில்லை.
1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறந்த ரணில் விக்ரமசிங்க, கொழும்பு றோயல் கல்லூரியில் தனது கல்வியை தொடர்ந்தார். உயர்கல்வியை முடித்துக் கொண்ட அவர், சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று சட்டத்தரணியாக வெளியேறினார்.
இதன் பின்னர், இலங்கையின் பழம் பெரும் அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில், 1970 ஆம் ஆண்டு இணைந்த அவர், 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், பியகம தொகுதியில் போட்டியிட்டு, முதல் தடவை பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்தார்.
மிக இளம் வயதிலேயே கல்வி, இளைஞர் விவகார அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் பல்வேறு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்ற அவர், இலங்கையில் ஐந்து தடவைகள் பிரதமராக திகழ்ந்த பெருமைக்குரியவர்.
மிக நீண்ட காலம் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து உள்ளார்.
கோட்டா பய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பதவியை ராஜினாமா செய்ததன் பின்னர், பதில் பிரதமராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஏற்பட்ட நெருக்கடி நிலையினால், ஜனாதிபதியாக பதவியில் இருந்த கோட்டா பய ராஜபக்ஷ நாட்டை விட்டு ஓடியதை அடுத்து, இவர் பதில் ஜனாதிபதியாக செயல்பட்டார்.
கோட்டா பய ராஜபக்ஷ , தனது பதவியை உத்தி ஒவ்வொருவருக்கமாக ராஜினாமா செய்து கொண்டதை அடுத்து, பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் படி, இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட எட்டாவது ஜனாதிபதியாக பதவி ஏற்று கொண்டார்.
மிகவும் நெருக்கடியான ஒரு நிலையில் ஆட்சியை பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க கடுமையான அர்ப்பணிப்போடு இப்பொழுது செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.