இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மீண்டும் பதற்றம்

0
25

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகின்றது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கின்றது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகின்றது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன.பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது.

மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனிடையே, மேற்குகரையின் ஹவ்ரா பகுதியில் இஸ்ரேலிய சகோதரர்கள் 2 பேரை பாலஸ்தீனிய பயங்கரவாதிகள் கடந்த மாதம் 26-ம் திகதி துப்பாக்கி சூடு நடத்தி கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், 2 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மேற்குகரையின் ஜெனின் அகதிகள் முகாமில் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஜெனின் முகாமிற்கு இஸ்ரேல் படைகள் சென்றன. அப்போது, இஸ்ரேல் படையினர் மீது பாலஸ்தீனிய ஆயுதக்குழுவை சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இஸ்ரேல் படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரு தரபுக்கும் இடையே நடந்த மோதலில் இஸ்ரேலிய சகோதரர்களை சுட்டுக்கொலை செய்த பயங்கரவாதி உட்பட பாலஸ்தீனிய ஆயுத குழுவை சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், 11 பேர் படுகாயமடைந்தனர். இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்