க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றிய மாணவர்களில் ஏறக்குறைய 75 வீதமானவர்கள் க.பொ.த உயர்தரத்தைப் பின்பற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்று பரீட்சை ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.
குறைந்தபட்சம் ஐந்து சித்திகளைப் பெற்றவர்கள், கணித பாடத்தில் சித்தியடையாத போதிலும் உயர்தர வகுப்புகளில் சேர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
முதல் தடவையாக பரீட்சைக்குத் தோற்றிய 311,321 மாணவர்களில் 231,982 மாணவர்கள் அதாவது 74.5 வீதமானவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மே-ஜூன் மாதங்களில் நடைபெற்ற பரீட்சையில் மொத்தம் 518,245 பரீட்சார்த்திகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் தேர்வெழுதினர்.
இந்தாண்டு 10,863 (3.49%) மாணவர்கள் 9A பெற்றுள்ளனர். கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின்படி, ஐந்து சித்திகளைப் பெற்ற மற்றும் கணிதத்தில் சித்தியடையாத மாணவர் கூட A/L கற்கைகளை தொடரமுடியும் என குறிப்பிட்டார்.
இதேவேளை, இம்முறை முதல் பத்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெறுபேறுகளை பரீட்சை திணைக்களம் வெளியிடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.