ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அதன் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு விசுவாசமான குழு என இரண்டு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் குழு ஒன்றும் செயற்பட்டு வருகின்றது. இந்த மூன்று பிளவு பட்ட குழுக்களும், மொட்டுக் கட்சிக்குள் இருப்பதனால், பிரயோசனம் இல்லை என்ற நிலையிலேயே செயல்படுவதை காண முடிகின்றது.
நாட்டை இந்த மோசமான நிலைக்கு இட்டுச் சென்றதின் பெரும் பங்கு மொட்டு கட்சிக்கே இருக்கிறது. பசில் ராஜபக்ஷை இதற்கு தலைமை தாங்கிய பொழுது, இனவாதத்தின் ஊடாகவே கட்சியை வளர்த்தெடுத்தார். அதாவது அப்பாவி சிங்கள மக்களின் பலவீனங்களை பயன்படுத்தி, மக்களை பிழையாக வழிநடத்தினார். இந்த செயல்பாட்டுக்கு மஹிந்த ராஜபக்ஷ,கோட்டா பய ராஜபக்ஷ ஆகியோர் உட்பட ராஜபக்ஷக்களே பின்னணியில் இருந்தார்கள்.
மக்கள் உண்மையையும் யதார்த்தத்தையும் உணர்ந்ததினால், இன்று சிங்கள மக்களே இந்த கட்சியையும் தலைவர்களையும் தூக்கி எறிந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், கோட்டாவையும் பசிலையும் ஓரங்கட்டி விட்டு தனது மகனை( நாமலை ) முதன்மைப்படுத்தி கட்சியை வளர்க்கலாம் என்று துடிக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ. மாவட்டங்கள் தோறும் மக்கள் மனதை மாற்றுவதற்கான முயற்சிகளிலும் களமிறங்கி இருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ.
என்றாலும், மொட்டுக்கட்சிக்கு கல்லில் நார் உரிக்கும் நிலை தான் ஏற்பட்டிருக்கிறது.
மக்களின் மாவட்டங்கள் தோறும் அறிந்து கொள்ளும் இந்த முயற்சியில், மொட்டு கட்சி இதுவரை தோல்வியை கண்டு இருக்கிறது.
மொட்டுக் கட்சியில் இருந்தால் தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே இந்த மூன்று அணிகளும் இப்பொழுது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தேர்தல் நெருங்குகின்ற பொழுது சில வேளைகளில், புதிய கூட்டணிகளை உருவாக்கி,இவர்கள் மொட்டு சின்னத்தில் இல்லாமல் மாற்று வடிவத்தில் போட்டியிடக் கூடிய நிலையும் இருக்கிறது. மொட்டு கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த மூன்று அணிகளின் பிளவு, ஒட்டிய உண்ணிகள் களர்வதற்கு ஒப்பானதாகும்.