மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்றில் மெல்போர்ன் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கடைசியாக இங்கிலாந்து அணி விளையாடிய போட்டியில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தது. குரூப் ஏ பிரிவில் இரு அணிகளும் மோதிய இந்த போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.இங்கிலாந்து இன்னிங்சின் போது மழைக்குறுக்கிட்டதால் டி.ஆர்.எஸ் விதிப்படி இங்கிலாந்து 14.3 ஓவர்களில் 111 ரன்களை எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து வீரர்கள் வெற்றிக்காக போராடிய போதும் அந்த அணியால் 14.3 ஓவர்களில் 105/5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றி கண்டது.
மறுபுறம், கடந்த 26ஆம் தேதியன்று ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் இடையிலான போட்டியில் ஸ்டாய்னிஸ் அதிரடியால் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த போட்டியில் ஒருவேளை இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தால் அதன்பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி இங்கிலாந்து அணிக்கு வாழ்வா? சாவா ஆட்டமாக மாறலாம். ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகள் மோதல்: மெல்போர்னில் கடந்த 26ஆம் தேதியன்று நடைபெற இருந்த போட்டியில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோத இருந்தன. ஆனால் மெல்போர்னில் தொடர்ந்து மழை பெய்ததால் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கும் மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இங்கிலாந்து அணியை வீழ்த்திய உற்சாகத்தில் அயர்லாந்து இன்று களம் காணுகிறது.