லண்டன்: இங்கிலாந்தின் 57வது பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 200 ஆண்டுகளில் இங்கிலாந்தின் மிக இளம் வயது பிரதமர் எனும் பெருமையை இவர் பெற்றுள்ளார். இந்நிலையில், ரிஷி சுனக் மீதான எதிர்பார்ப்பு குறித்தும், அவர் முன் காத்திருக்கும் பல்வேறு சவால்கள் குறித்தும் தற்போது பார்ப்போம்.
பொருளாதார குழப்பம்: இங்கிலாந்தின் பொருளாதாரம் கடும் சரிவில் இருந்து வருகிறது. அதன் பணவீக்கம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக 10 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மக்களின் சராசரி வருவாய் உயர்வோடு ஒப்பிடுகையில், பொருட்களின் விலை உயர்வு அதிகமாக உள்ளதால் மக்களின் வாழ்க்கைத் தரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. மக்கள் தங்களின் செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வை ரிஷி சுனக் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்பது இங்கிலாந்து மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதோடு, அடுத்த ஆண்டுக்கான இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.30 சதவீதமாக இருக்கும் என ஐ.எம்.எஃப் மதிப்பிட்டுள்ளது. இதனை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை ரிஷி சுனக் மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
வரி குறைப்பு: இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. பெரு நிறுவனங்கள் வரி குறைப்பை வலியுறுத்தி வருகின்றன. வரி குறைப்பு தொடர்பாக தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை கன்சர்வேடிவ் கட்சி அமல்படுத்த வேண்டும் என்று பெரு நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. அதேநேரத்தில், பெரு நிறுவனங்களிடம் அதிக வரி வசூலிக்க வேண்டிய கட்டாயத்தில் நாடு இருப்பதாகக் கூறும் பொருளாதார நிபுணர்கள், பெரு நிறுவனங்களுக்கு வரியை அரசு குறைக்கக்கூடாது என வலியுறுத்துகின்றனர். அப்போதுதான், அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரி உயர்வை தவிர்க்க / குறைக்க முடியும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். வரியை உயர்த்தினாலும் பிரச்சினை; வரியை உயர்த்தாவிட்டாலும் சிக்கல் எனும் சூழலில், இது விஷயத்தில் ரிஷி சுனக் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.