இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், முன்னாள் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மேன், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், கட்சியின் மூத்த தலைவர்கள் பென்னி மொர்டான்ட், பென் வாலஸ், ஜெரோமி ஹண்ட் உள்ளிட்டோர் பிரதமர் பதவிக்கு போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்கட்டமாக கட்சி எம்.பி.க்கள் இடையே உட்கட்சி தேர்தல் நடத்தப்படும். அவர்களின் வாக்குகளின் அடிப்படையில் 2 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். இறுதிக்கட்டமாக கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். இதில் அதிக வாக்குகளை பெறும் வேட்பாளர் இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்பார்.
லிஸ் ட்ரஸ் பதவி விலகலுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கான போட்டியில் இருக்கும் ரிஷி சுனக், சுயெல்லா பிராவர்மேன் ஆகியோர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவர். ரிஷி சுனக் பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்டவர். இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயண மூர்த்தியின் மகள் அக்சதா மூர்த்தியை திருமணம் செய்துள்ளார். மற்றொரு வேட்பாளர் சுயெல்லா பிராவர்மேனின் தந்தை கிறிஸ்டி பெர்னாண்டஸ் கோவா மாநிலத்தை சேர்ந்தவர். அவரது தாய் உமா தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
இப்போதைய சூழ்நிலையில் ரிஷி சுனக் பிரதமராக அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த முறை ஆளும் கட்சி எம்.பி.க்களில் 137 பேர் ரிஷியை ஆதரித்தனர். லிஸ் ட்ரஸுக்கு 113 எம்.பி.க்கள் மட்டுமே ஆதரவு அளித்தனர்.
ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சியினர் வாக்களித்தபோது ரிஷிக்கு 42.6 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. லிஸ் ட்ரஸ் 57.4 சதவீத வாக்குகளைப் பெற்று பிரதமராக பதவியேற்றார். இந்தமுறை எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்து புதிய பிரதமரை தேர்வு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.