சான் பிரான்சிஸ்கோ: லாக்-இன் விவரங்களை அடுத்தவர்களுடன் பகிரும் பயனர்களிடத்தில் கூடுதலாக கட்டணம் வசூலிக்க உள்ளதாக ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்துள்ளது. வருவாய் மற்றும் பதிவு செய்து பயன்படுத்தும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை சரிவு காரணமாக பாதிக்கப்பட்டது அந்நிறுவனம். அதே நேரத்தில் நிறுவனத்தின் மந்தமான வளர்ச்சிக்கு பயனர்கள் தங்கள் பாஸ்வேர்டுகளை பகிர்வது முக்கியக் காரணம் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பாஸ்வேர்டை பகிரும் பயனர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ். வரும் 2023 முதல் இந்த கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.
இந்த நடவடிக்கையின் மூலம் பயனர்கள் இடத்தில் பாஸ்வேர்டு பகிரும் வழக்கத்தை தகர்க்க முடியும் என நம்புவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் 2023 தொடக்கத்தில் ரஷ்யா மற்றும் சீனா நீங்கலாக, இது உலக அளவில் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது. அந்த இரண்டு நாடுகளில் நெட்ஃப்ளிக்ஸ் இயங்கவில்லை.
வாடிக்கையாளர்களிடம் பெற்ற கருத்துகளின் அடிப்படையில் இந்த நகர்வை முன்னெடுத்துள்ளதாக நெட்ஃப்ளிக்ஸ் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் கணக்குகளை அடுத்தவர்களுடன் பகிர முடியும். இருதாலும் இதன் கட்டண விவரம் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.