பொதுத்தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்காவிட்டால் – பாகிஸ்தான் அரசுக்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை!

62

பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்ந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார். இம்ரான்கான் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.தனது அரசை வெளிநாட்டு சக்தி சதி செய்து கவிழ்த்து விட்டதாகவும், உடனே பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான்கான் வலியுறுத்தி வருகிறார்.

தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த 131 சட்டமன்ற உறுப்பினர்கள் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தின் கீழ்சபையிலிருந்து ராஜினாமா செய்தனர்.அந்த இடங்களுக்கு கட்டம் கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம்அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி, பாகிஸ்தான் இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றார். பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, இம்ரான் கான் கட்சியினர் மொத்தம் இடைத்தேர்தல் நடந்த எட்டு இடங்களில் 7ல் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றனர்.

இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதன்மூலம் பாகிஸ்தான் அரசியலில் இம்ரான் கான் கட்சிக்கு மக்கள் ஆதரவு பெருகியிருப்பதை காட்டுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் விரைவில் பொதுத்தேர்தல் வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து இம்ரான் கான் செய்தியாளர்களிடம் நேற்று பேசியதாவது:- பாகிஸ்தான் அரசை எதிர்த்து நடைபெற உள்ள எங்கள் பிடிஐ கட்சியின் “ஆசாதி மார்ச்” என்ற பிரம்மாண்ட பேரணிக்கான அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், அடுத்த பொதுத்தேர்தலுக்கான தேதியை அரசு உடனடியாக அறிவிக்காவிட்டால், இனியும் தாமதிக்காமல் அக்டோபரில் பேரணி நடைபெறும். பேரணிக்கு முன்பு, அரசாங்கத்திற்கு இன்னும் சிறிது நேரம் கொடுக்கிறேன்.

ஆனால், இதுபோன்ற அரசியல் குற்றவாளிகளுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. பாகிஸ்தான் அரசாங்கம் தேர்தலை நடத்த விரும்பவில்லை. வெள்ளத்தை ஒரு சாக்காக பயன்படுத்தியது. பிடிஐ பலவீனமாக இருந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது.ஒட்டுமொத்த தேசமும் இந்த நாடாளுமன்றத்தையும், இந்த அரசாங்கத்தையும் நிராகரித்து உள்ளது. புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற விருப்பம் நாடு முழுவதும் உள்ளது.

பாகிஸ்தான் மக்களுக்கு அவர்களின் சுயமரியாதைக்கான உரிமையை அரசியலமைப்பு வழங்கவில்லையா? இந்த ஆட்சியாளர்கள் தேர்தலுக்கு பயந்து இருக்கின்றனர். முன்னோக்கி செல்ல வேண்டிய நேரம் இது. பாகிஸ்தான் அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச மனித உரிமை அமைப்புகளை அணுகுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Join Our WhatsApp Group