ஜெயலலிதா மரணம் : சசிகலா குற்றவாளி? – ஆறுமுகசாமி ஆணையம் கூறும் முக்கியத் தகவல்கள்!

57

ஆறுமுக சாமி ஆணையத்தின் அறிக்கைப்படி, “ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற்றிருந்தால் ஜெயலலிதாவின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கலாம். இதனை சுயலாபத்துக்காக சசிகலா தடுத்திருக்கலாம்.” என்கிறது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா இறந்து 6 வருடங்கள் நிறைவடைய இருக்கிறது. அவரது மரணத்திற்கு முந்தைய நாட்களில் காக்கப்பட்ட ரகசியங்கள், பல கேள்விகளை அப்போதே எழுப்பியது.

செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு இடைப்பட்ட நாட்கள் அவரை பார்பதற்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் நிறைந்திருப்பதாக பலதரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக 2017ல் மதுரையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “ஜெயலலிதா இட்லியும் சாப்பிடவில்லை, சட்னியும் சாப்பிடவில்லை. நாங்கள் சொன்னது எல்லாம் பொய். பொதுமக்கள் எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்” எனக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தான் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் வந்த திடுக்கிடும் தகவல்கள் :

ஜெயலலிதா இறந்த நேரம் 5.12.2016 இரவு 11.30 மணி என்று மருத்துவமனை கூறும் நிலையில், அதற்கு முந்தைய நாளான 4.12.2016 அன்று மதியம் 3 – 3:50க்குள் அவர் இறந்துவிட்டதாக சாட்சிகள் கூறுகின்றன.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் மாடியில் உள்ள தனது அறையின் குளியலறையில் இருந்து படுக்கைக்கு வந்தபோது மயங்கி விழுந்துள்ளார். அப்போது அங்கிருந்த சசிகலா உள்ளிட்டோர் அவரைத் தாங்கி பிடித்துள்ளனர்.

ஜெயலலிதா மயக்கமடைந்த பின்னர் நடந்த நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சசிகலாவின் உறவினர்களே மருத்துவமனையை ஆக்கிரமித்திருந்தனர். 2012ஆம் ஆண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் மீண்டும் இணைந்த பிறகு அவர்களுக்கு இடையிலான உறவு சுமூகமாக இல்லை.

ஜெயலலிதாவுக்கு உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு, ஹைப்போ தைராடிசம், நாள்பட்ட வயிற்றுப்போக்குடன் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி இருந்திருக்கிறது.

ஜெயலலிதா இதயத்தில் வெஜிடேசன், பெர்ஃபொரேசன் மற்றும் டயஸ்டோலிக் டிஸ்பரேஷன் ஆகியவற்றுக்காக பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல், மருத்துவர் சமின் ஷர்மா ஆகியோர் ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர். ஆனால் அவரது கடைசி மூச்சு வரை ஏன் நடக்கவில்லை?

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவர் எந்த நேரத்திலும் டிஸ்சர்ஜ் செய்யப்படலாம் என வெளியிடப்பட்ட அறிக்கை பொய்யானது.

ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற்றிருந்தால் ஜெயலலிதாவின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கலாம். இதனை சுயலாபத்துக்காக சசிகலா தடுத்திருக்கலாம்.

பரிந்துரைகள் : ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கே.எஸ். சிவகுமார், அப்போதைய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய நால்வர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அப்போலோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டியை விசாரிப்பது தொடர்பாக அரசு முடிவு செய்யலாம்.

நன்றி- நியூஸ் சென்ஸ்

Join Our WhatsApp Group