யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் முன்னெடுத்த விசாரணைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்ட தரப்பினர் நேற்று முன்தினம் இடையூறு ஏற்படுத்தியதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு 2 லட்சம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை விரைவுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடமாடும் சேவை நடத்தப்பட்டது.
இதன் அங்கமாக கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற நடமாடும் சேவையின் போது அங்கு பிரவேசித்திருந்த, அதிகாரிகள் மற்றும் பயனாளிகளை அச்சுறுத்தும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரண் உள்ளிட்ட தரப்பினர் இடையூறை ஏற்படுத்தினர்.
இதன் காரணமாக பயன்பெறுவதற்காக அங்கு சென்றிருந்த 67 பேருக்கான சேவை கிடைக்காமல் போனது, நடமாடும் சேவை இடைநடுவே நிறுத்தப்பட்டது. இது தொடர்பில் காவல்துறையினரிடம் முறையிட்டதற்கு அமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாடாளுமன்ற அமர்வின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களிடம் வினவ உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.