காற்றின் வேகம் 100 கி.மீ வரை அதிகரிக்கலாம் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் 19ஆம் திகதி புதன்கிழமை வரை நீடிக்குமென வளிமண்டலவியல் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுடன் மண்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். புத்தளம், குருணாகல், மாத்தளை, கம்பஹா, கண்டி, கேகாலை, நுவரெலியா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இரவு நேரங்களில் சில இடங்களில் மி.மீ. 75 க்கு மேல் பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், பேருவளை தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை, பொத்துவிலூடாக மட்டக்களப்பு வரையான கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம். இது சுமார் 60 தொடக்கம் -70 வரை மாறும் சாத்தியம் காணப்படுகின்றது.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் இடியுடன் கூடிய மழையுடன் கொந்தளிப்பாக மாறக்கூடுமென்றும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவிக்கிறது