மட்டக்களப்பு கரடியனாறு மற்றும் சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன புல்லுமலையில் புதைத்துவைக்கப்பட்ட வெடிமருந்துக்களையும். புலிபாய்ந்தகல் காடுப்பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் அதற்கான ரவைகளை நேற்று புதன்கிழமை (12) மாலை விசேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள கோரவெளி காட்டுப் பகுதியில் சம்பவதினமான நேற்று மாலை களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருடன் இராணுவ புலனாய்வு பிரிவினர் குறித்த காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி 56 ரக துப்பாகி ஒன்றும் 8 ரவைகளையும் மீட்டனர்.
இதேவேளை, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன புல்லுமலை வயல் பகுதியில் உழவு இயந்திரத்தால் வயலை உழுதபோது பெரல் ஒன்றின் மூடி வெளியே வந்தததையடுத்து நிலத்தை தோண்டியபோது நிலத்தில் புதைத்துவைக்கப்பட்ட பரல் ஒன்றில் வெடிபொருட்கள் இருப்பதை கண்டு பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து பொலிசார் பரலில் இருந்து பாதுகாப்பாக பொலித்தீனில் சுற்றப்பட்ட பெருமளவிலான வெடி மருந்துக்களை மீட்டுள்ளனர்.
இந்த பகுதி முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி என்பதுடன் மீட்கப்பட்ட வெடி மருந்துக்களை நீதிமன்ற உத்தரவினை பெற்று செயலிழக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.




