இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியது. டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதை தொடர்ந்து இன்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இன்றைய வெற்றி, இந்த வருடத்தில் இந்திய அணி பெறும் 38-வது வெற்றியாகும். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டி என அனைத்து பார்மெட்களிலும் சேர்த்து இந்திய அணி இந்த வருடத்தில் தற்போது வரை 38 வெற்றிகளை பெற்றுள்ளது.
இதன் மூலம் இந்திய அணி 19 ஆண்டுகால ஆஸ்திரேலிய அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்று இருந்த ஆஸ்திரேலிய அணி அந்த வருடத்தில் மொத்தம் 38 போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தது. இதுவே ஒரு வருடத்தில் ஒரு சர்வதேச அணி பெற்ற அதிக வெற்றியாக இருந்தது. தற்போது இந்திய அணி அந்த சாதனையை சமன் செய்துள்ளது.
20 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரவிருக்கும் சூழலில் ஆஸ்திரேலிய அணியின் சாதனையை முறியடிக்க இந்திய அணிக்கு ஒரு வெற்றி மட்டுமே தேவைப்படுகிறது. இதனால் விரைவில் இந்திய அணி அந்த சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.