உக்ரைனில் தலைநகர் கீவ் உள்ளட்ட நகரங்கள் மீண்டும் வெடிகுண்டு தாக்குதலுக்குள்ளாகின.
கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் மையப்பகுதியின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக நகர மேயர் தெரிவித்துள்ளார். கிரீமியா பாலத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு உக்ரைன் மீது ரஷ்யா குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
பல மாதங்களாக உக்ரைன் தலைநகரில் அமைதி நிலவி வந்த நிலையில், திங்கள்கிழமை உள்ளூர் நேரப்படி 8.15 மணிக்கு தலைநகரின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. குண்டுவெடிப்பு நடப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பாக வானில் சைரன் ஒலி கேட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் குறித்து கிவ் நகரின் அவசரகால சேவை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். லிவி, டெர்னோபில், க்மெல்னிட்ஸ்கி, சைட்டோமிர், , க்ரோபிவ்னிட்ஸ்கி ஆகிய பகுதிகளிலும் தாக்குதல் நடைபெற்றுள்ளதால் பல்வேறு பகுதிகளில் மீட்பு பணியாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார் இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், “உக்ரைன் முழுவதும் நடந்துள்ள குண்டுவெடிப்பால் பலர் இறந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். ரஷ்யா எங்களை முற்றிலுமாக அழிக்க நினைக்கிறது. பூமியிலிருந்து அகற்ற நினைக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.