ரியாத்: இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையை பரப்ப வேண்டும் என்று முஸ்லிம் உலக லீக் அழைப்பு விடுத்துள்ளது. சவுதி அரேபியாவின் மெக்கா நகரை தலைமையிடமாகக் கொண்டு முஸ்லிம் உலக லீக் அமைப்பு செயல் படுகிறது. உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய அமைப்பான இதில், 139 நாடுகளைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். முதல் முறையாக இந்த அமைப்பு மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடி உள்ளது. மேலும், இதுதொடர்பாக முஸ்லிம் உலக லீக் ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. காந்தி ஜெயந்தியை ஐ.நா. சபை சர்வதேச அகிம்சை தினமாக அறிவித்துள்ளது. தொலைநோக்கு சிந்தனையாளரான காந்தியை நினைவுகூர்ந்து அவரது அகிம்சை பாதையில் நடக்க வேண்டும். அவரது பிறந்த நாளை நாம் அனைவரும் உற்சாகமாகக் கொண்டாட வேண்டும். கல்வி மூலமாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாகவும் அவரது அகிம்சை கொள்கைகளைப் பரப்ப வேண்டும். என்று முஸ்லிம் உலக லீக் தெரிவித்துள்ளது.