“கோட்டாபய ராஜபக்சவுக்கு வக்காலத்து வாங்கி, சிறிது காலம் தலைமறைவான மலையக அரசியல்வாதிகள் சிலர் மீண்டும் துள்ள ஆரம்பித்துள்ளனர். அவர்களின் முகமூடி அரசியல் இனியும் மக்கள் மத்தியில் எடுபடாது, பதவிக்கும், பணத்துக்கும் விலைபோகாத எங்கள் பின்னாலேயே மக்கள் அணிதிரள்வார்கள்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.
பத்தனை, தலவாக்கலை, லிந்துலை ஆகிய பிரதேசங்களில் உள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்ட கமிட்டி தலைவர்களுடான சந்திப்பு கூட்டம் தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் இன்று (02.10.2022) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே உதயகுமார் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு, ” நாட்டிலே ஒரு புறம் விலை அதிகரிப்பு இடம்பெறுகின்றது, மறுபுறத்தில் வரி அதிகரிப்பு இடம்பெறுகின்றது. இதனால் மக்கள் பெரும்பாடு படுகின்றனர்.
மூவேளை உண்டு வாழ்ந்த மக்கள் உணவு வேளையை சுருக்கியுள்ளனர். மேலும் சிலர் உண்ணும் அளவை குறைத்துள்ளனர். சிலருக்கு உணவு உண்ண வழியில்லை. பிள்ளைகளை பாடசாலைகளில் மயங்கி விழும் நிலையும் உள்ளது. தற்போதைய நிலைமை நீடித்தால் அடுத்து வரும் மாதங்களில் நிலைமை மோசமாகும்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் வாழ்க்கைச் சுமைக்கேற்ற ஊதியம் இல்லை. தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது. ஆனால் பழைய சம்பளம்தான் வழங்கப்படுகின்றது. எனவே, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்காக நாம் போராடுவோம். தமிழ் முற்போக்கு கூட்டணியாக குரல் கொடுப்போம். மற்றையவர்களைபோல ஏமாற்று அரசியல் நடத்த மாட்டோம்.