ஜனாதிபதியின் சர்வதேச, உள்ளூர் சிரேஷ்ட ஆலோசகர்களாக பேராசிரியர்கள் சுனந்த மத்துமபண்டார, ஷெனுகா செனவிரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பேராசிரியர் சுனந்த மத்துமபண்டார ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவும் (ஊடகம்) மற்றும் பேராசிரியர் ஷெனுகா செனவிரத்ன, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவும் (சர்வதேச ஊடகம்) அண்மையில் கடமைகளைப் பொறுப்பேற்றனர்.
களனிப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் சுனந்த மத்துமபண்டார, அப்பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞான கல்விப் பிரிவின் தலைவராகவும் சமூக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சின் செயலாளராக பணியாற்றியுள்ள அவர், அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகமாகவும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் நாயகமாகவும் பதவி வகித்துள்ளார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் (சர்வதேச ஊடகம்) பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள திருமதி ஷெனுகா செனவிரத்ன, இந்த நாட்டின் இராஜதந்திர விவகாரங்களில் அதிக அனுபவமுள்ள சிரேஷ்ட அதிகாரியான அவர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவியையும் வகித்துள்ளார்.
திருமதி ஷெனுகா செனவிரத்ன, ஐக்கிய இராச்சியத்தின் இலங்கை உயர்ஸ்தானிகராகவும், தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவராகவும், ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதியாக ஜெனிவா மற்றும் நியூயோர்க்கில் பணியாற்றியுள்ளார்.