ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் மற்றும் செயற்குழுக் கூட்டம் ஆகியன நேற்று நடந்தன. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டாலும், நாளை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ள அவசரகால சட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு ;
01). கருத்துத் தெரிவிக்கும் உரிமை, போராட்டம் நடத்துவதற்கான உரிமை மற்றும் மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும் உரிமைகளை ஒடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
02). மக்கள் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வுகளை வழங்காமல் அரச பயங்கரவாதத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறை அரசாங்கத்துடன் கூட்டுச் சேராதிருப்பதாக தீர்மானிக்கப்பட்டது.
03). பாராளுமன்ற ஜனநாயக அமைப்பில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக பாராளுமன்றத்தில் குழு முறைமையொன்று ஸ்தாபிக்கப்பட்டால், அதற்கு ஆதரவளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.