மாஸ்கோ: ஜெர்மனிக்கு நாட்டுக்குச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் லைனை ரஷ்ய அரசு மூடியுள்ளது. இதனால் அந்நாட்டுக்குக் கிடைக்கும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட வளங்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், உணவு உள்ளிட்ட பொருட்களை சார்ந்து இருக்கும் ஐரோப்பிய நாடுகள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், ஐரோப்பாவில் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் ஜெர்மனி, இயற்கை எரிவாயு நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், பல்வேறு நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தை ரஷ்யா குறைத்த பின்னர், குளிர் காலத்துக்கான சேமிப்பு தங்களிடம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதனால் ஜெர்மனியில் தொழில்துறை நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்தும் இயற்கை எரிவாயுவின் அளவைக் குறைக்க வேண்டும் என்றும் அந்நாட்டின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நீடித்து வரும் உக்ரைன் போர் காரணமாக கடந்த வாரம் முதல் எரிபொருட்களின் விலை உயர்ந்து, இயற்கை எரிவாயு விநியோகத்தை ரஷ்யா குறைத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி அரசு கூறியுள்ளது.
மேலும் ரஷ்யாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே எரிபொருள் வர்த்தக பிரச்சினை நீடிப்பதால், ஜெர்மனியும் பிற நாடுகளும் நிலக்கரியை பயன்படுத்த முனைந்துள்ளன.