** பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
2 ஹெக்டயர் (சுமார் 5 ஏக்கர்) அல்லது அதற்கு குறைந்த ஹெக்டயர் நெற் செய்கைக்காக, அரச வங்கிகளில் பெற்றுக் கொண்டு திரும்பி செலுத்தாத விவசாய கடனை இரத்துச் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று (04) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், பின்னர் ஏற்பட்ட கொவிட்-19 பெருந்தொற்று நிலைமையால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மேலும் மோசமடைந்து வருவதுடன், பொதுவாக அனைத்து துறைகள் மீதும் நேரடியானதும் மறைமுகமானதுமான தாக்கங்களை ஏற்படுத்திய வண்ணமுள்ளது.
இந்நிலைமை ஒட்டுமொத்த சனத்தொகையில் 30% வீதத்தினராகிய விவசாயிகளால் இதனை தாங்கிக் கொள்வதற்கு சிரமமாக இருப்பதுடன், இரசாயன உரப் பாவனைக்குப் பதிலாக இயற்கை உரப் பாவனையை அறிமுகப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தால் விவசாயிகள் மேலும் பல சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.
இந்நிலைமையின் கீழ் நெற்பயிர்ச்செய்கைக்காக விவசாயிகளால் பெறப்பட்டுள்ள கடன்தொகையை மீளச் செலுத்துவதற்கு இயலாமல் போயுள்ளதுடன், குறித்த கடன்களை அறவிடமுடியாக் கடனாக வங்கிகள் வகைப்படுத்தியுள்ளன.
எனவே, எதிர்வரும் பெரும்போக நெற்செய்கைக்குத் தேவையான கடன்தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு அதிகமான விவசாயிகள் தகைமையற்றவர்களாவதற்கு வாய்ப்புள்ளமையால், அரச தலையீட்டில் அவர்களுக்கு சலுகைகளை வழங்குவது அத்தியாவசியமாகவுள்ளது.
அதற்கமைய, இரண்டு ஹெக்டயர் அல்லது அதற்குக் குறைவான காணியில் நெற்செய்கைக்காக அரச வங்கியிலிருந்து கடன் பெறப்பட்டு தற்போது மீளச் செலுத்துவதற்கு இயலாமல் போயுள்ள ஆரம்பக் கடன் தொகையை தள்ளுபடி செய்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது