அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள நடுத்தர வருமானம் பெறுவோருக்கான மாடி வீட்டுத் திட்டம், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சியின் கல்முனை அலுவலகத்தில் நேற்று (24) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஊடகவியலாளர்களை கௌரவிக்கின்ற வகையில், அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்ற வகையிலும் நடுத்தர வருமானம் பெறுவோருக்கான மாடி வீட்டு திட்டத்தின் பயனாளிகளாக இவர்களை உள்ளீர்க்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
“கடந்த போர் கால சூழலில் தமது உயிரைப் பணயம் வைத்து ஊடகவியலாளர்கள் பணியாற்றினார்கள். அதேபோல, தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுப் பரம்பல் அச்ச சூழலிலும் பாரிய சவால்களுக்கு மத்தியில் மகத்தான சேவையை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
“அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் பயனாளிகளாக ஊடகவியலாளர்களையும் இணைத்து கொண்டே அரசாங்கம் பயணிக்கின்றது. எனினும், பொதுவாக தலைநகரத்தையும், அதன் அண்டிய இடங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கே அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலை திட்டங்களின் நன்மைகளை பெறுகின்றனர்.
“குறிப்பாக அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு இதற்கான வாய்ப்புகள் அரிதாகவே உள்ளன. மிக அதிக எண்ணிக்கையில் ஊடக தொழில் புரிவோர் அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்றனர். இவர்கள் நடுத்தர வருமானம் பெறுபவர்களாகவே உள்ளனர்” என்றார்.